சென்னை: தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த புஷ்பலதா, மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. 1961ல் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். ‘சாரதா’, ‘பார் மகளே பார்’, ‘யாருக்கு சொந்தம்’, ‘தாயே உனக்காக’, ‘கற்பூரம்’, ‘ஜீவனாம்சம்’, ‘தரிசனம்’, ‘கல்யாண ராமன்’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’ உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
தனது கணவர் ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து சில படங்களையும் அவர் தயாரித்தார்.
சண்முகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.வி.எம்.ராஜன், ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த படங்களில் நடித்ததால், தனது பெயரை ஏ.வி.எம்.ராஜன் என மாற்றிக் கொண்டார். அவரும், புஷ்பலதாவும் ‘நானும் ஒரு பெண்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்தனர். பிறகு 1964ல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் மகாலட்சுமி, தமிழ் உள்பட பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். இந்து மதத்தை சேர்ந்த ஏ.வி.எம்.ராஜன், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி முழுநேர ஊழியம் செய்து வருகிறார். அவருடன் புஷ்பலதாவும் முழுநேர ஊழியம் செய்து வந்தார்.
The post நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவி நடிகை புஷ்பலதா மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.