சென்னை: நடிகர் சிங்கமுத்து மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் சாட்சியளிப்பதற்காக நடிகர் வடிவேலு உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்தார். யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்குமாறு நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வடிவேலு தரப்பில், இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு சாட்சி விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது, சிங்கமுத்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் வாக்குமூலத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அதில் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார். நடிகர் வடிவேலு நீதிமன்றத்திற்கு வந்த தகவல் தெரிந்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் வடிவேலுவுடன் செல்பி எடுத்தனர்.
The post நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கு; நகைச்சுவை நடிகர் வடிவேலு உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் appeared first on Dinakaran.