*உணவு பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியில் செயல்படும் நான்கு கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகளில் உபயோகித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி கோழிக்கறி பொறித்து விற்பனை செய்யப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றுள்ளது.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், புகார் கூறப்பட்ட கடைகளை ஆய்வு செய்தார்.
அங்குள்ள எண்ணெயை ஆய்வு செய்ய பயன்படும் கருவியைக்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அனைத்து கடைகளும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தது இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் மூன்று கடைகளில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சோதனையில் கண்டறியப்பட்டது. ஒரு கடையில் உபயோகித்த எண்ணெய் ஒன்றரை லிட்டரும் மற்ற இரண்டு கடைகளில் தலா ஐந்து லிட்டர்களும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட எண்ணெய்கள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. மூன்று கடைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் இனி வரும் காலங்களில் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. மீறினால் உணவு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டு முடிவுகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், விதிகளின்படி வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.
The post நாகை வெளிப்பாளையத்தில் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை சமையலுக்கு உபயோகித்த 3 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.