மும்பை: “நாக்பூரில் நடந்த மதக் கலவரம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதியாக இருக்கலாம்.” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கும்பல் குறிப்பிட்ட சில வீடுகள், வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டி முதல்வர் பட்னாவிஸ் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாக்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் பட்னாவிஸ், “நாக்பூரில் நடந்த மதக் கலவரம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதியாக இருக்கலாம். கலவரக்காரர்கள் கற்கள், ஆயுதங்களை திட்டமிட்டுக் கொண்டுவந்துள்ளனர். இக்கலவரத்தில் காவல்துறையைச் சேர்ந்த 33 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் துணை ஆணையர்கள் ஆவர். மேலும், மூத்த காவல் அதிகாரி ஒருவரை கோடரி கொண்டு தாக்கியுள்ளனர்.