சென்னை: நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், அர்ஜூன் எரிகைசி உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6வது சுற்றி ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, தமிழ்நாட்டு வீரர் குகேஷ் எதிர்கொண்டார்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரராக உள்ள கார்ல்சனுக்கும், உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கும் இடையே ஆட்டம் அனல் பறந்தது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றிபெற்றார். இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்ற நிலையில், 2வது ஆட்டத்தில் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றி பெற்ற குகேஷுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “நார்வே செஸ் போட்டியில் கிளாசிக்கல் முறையில் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷுக்கு வாழ்த்துக்கள். செஸ் விளையாட்டில் குகேஷின் முக்கியமான மைல்கல். செஸ் போட்டியில் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” என தெரிவித்துள்ளார்.
The post நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷக்கு முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.