சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில், எந்தச் சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறைய கூடாது, குறையவிட கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுவரையறை கிடைக்கும் வரை நாம் இணைந்து ஒற்றுமை உணர்வோடு போராடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தொடக்க உரை நிகழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக்கிற, ஆட்சி செய்கிற ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்திருப்பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். சிறந்த வளர்ச்சியை அடைய முடியும். அனைத்து தரப்பு மக்களும் போராடியதால்தான், நாட்டுக்கு விடுதலை கிடைத்தது.