மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீட்டால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கெனவே மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனம், வைகை ஆற்றுப் பாசனம், திருமங்கலம் கால்வாய் பாசனம், 58 கிராம கால்வாய் பாசனம், கள்ளந்திரி கால்வாய் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறு பாசனம் மூலம் நெல் விவசாயம் 80 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாழை, கரும்பு, தென்னை மற்றும் காய்கறிகள் பயிர் விவசாயம் நடந்து வருகிறது. இதில் தற்போது பருவகால மாற்றம், தரமற்றவிதைகள், அளவுக்கதிகமான உரங்கள் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மாவட்டம் முழுவதும் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது 40 மூட்டைகள் விளைச்சல் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது 2 மூட்டைகள் மட்டுமே அறுவடையாகும் நிலையில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.