நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவானது. தெற்கு கேரளா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, பைபாஸ் சாலை, முருகன்குறிச்சி, புதிய பஸ் ஸ்டாண்ட், மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பலத்த மழை காணப்பட்டது. அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், முக்கூடல் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, மேலகரம், சுரண்டை, ஆலங்குளம், ெசங்கோட்டை, வடகரை, கடையநல்லூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. இந்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுவாக மார்ச் மாதத்தில் நல்ல ெவயில் காணப்படும். ஆனால் மார்ச் 1ம் தேதியான நேற்று மழை காலம்போல வானிலை நிலவியது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, பாபநாசம் அணை நீர்மட்டம் 80.60 அடியாக உள்ளது.
விநாடிக்கு 648 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 1100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையில் 81,36 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 86.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 87.76 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 288 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 435 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. நம்பியாறு அணையின் நீர் இருப்பு 13.12 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 5.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, அம்பையில் 19 மிமீ, சேரன்மகாதேவியில் 29.4 மிமீ, மணிமுத்தாறில் 23.8 மிமீ, நாங்குநேரியில் 8 மிமீ, பாளையங்கோட்டையில் 13 மிமீ, பாபநாசத்தில் 48 மிமீ, நெல்லையில் 10.6 மிமீ, சேர்வலாறில் 42 மிமீ, கன்னடியன் அணைக்கட்டில் 20.20 மிமீ, களக்காட்டில் 36.4 மிமீ, மாஞ்சோலையில் 55 மிமீ, காக்காச்சியில் 66 மிமீ, நாலுமுக்கு எஸ்டேட்டில் 72 மிமீ, ஊத்து எஸ்டேட்டில் 8.1 செமீ (81 மிமீ) மழை பதிவாகியுள்ளது.
The post நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு: ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக 8 செ.மீ பதிவு appeared first on Dinakaran.