சென்னை: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி இன்று (மார்ச் 18) அதிகாலை ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியவர்.