ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரவுபதி அம்மன் கோயில் விழா 28 ஆண்டுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சுவாமி ஊர்வலத்தின்போது வாண வேடிக்கை நடத்தப்பட்டு வந்தது. 15வது நாள் விழா நேற்று நடைபெற்றது. நேற்றிரவு 9 மணியளவில் பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டது. மூன்று இளைஞர்கள் பட்டாசுகளை கொண்டு சென்றுள்ளனர்.
உரிய பாதுகாப்பின்றி இருசக்கர வாகனத்தில் இருந்தவாறே பட்டாசுகளை ஒன்றன் பின் ஒன்றாக கொளுத்தி போட்டவாறு சென்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி விழுந்ததில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்விழாவில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், இருசக்கர வாகனத்தில் வந்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (29), கார்த்திகேயன் (12), லோகநாதன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வாண வேடிக்கை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பலர் படுகாயமடைந்தனர்.
The post பட்டாசு வெடித்து 4 பேர் உடல் சிதறி பலி: கோயில் விழாவில் பயங்கரம் appeared first on Dinakaran.