புதுச்சேரி: பாமக பொதுச்செயலாளரை கண்டுபிடித்தால் ரூ.100 பரிசு என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அன்புமணியை வடிவேல் ராவணன் நேற்று சந்தித்துள்ளதால் அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு ராமதாஸ் வந்துள்ளார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க கட்சியாக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். கடந்த 45 ஆண்டுகளாக பாமகவை எனும் கட்சியை உருவாக்கிய நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கட்சியில் சில முக்கிய பதவிகளில் நியமித்தார். இதன் காரணமாக பாமகவுக்குள் அதிருப்திகளும், பூசல்களும் முளைக்கத் தொடங்கின.
இந்நிலையில், தனது மகன் அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்திருந்த நிலையில் பேரன் பரசுராமன் முகுந்தனை இளைஞர் பதவிக்கு முன்னிறுத்தியபோதுதான் தந்தை, மகன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விரிசல் படிப்படியாக அதிகமாகியது. இது மாமல்லபுரம் வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டுக்குபின் பூதாகரமானது.
அதாவது தலைவர் பதவியை பிடுங்கி செயல் தலைவராக அன்புமணியை மாற்றியமைத்த ராமதாஸ், இனி தலைவர் நான்தான் என்று அறிவித்தார். இதனை ஏற்காத அன்புமணியோ தந்தையின் உத்தரவை ஏற்காமல் தனியாக சென்னை பனையூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி, பதிலடியில் இறங்கினார். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் அடுத்தடுத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களின் பதவிகளை பறித்து புதியவர்களை ராமதாஸ் நியமித்தார். நீக்கியவர்களுக்கு அன்புமணி பதவிகளை வழங்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியில் கடும் குழப்பம் நீடித்தது.
இதுவரையிலும் 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 2026 சட்டசபை தேர்தலை நானே பாமகவில் முன்னின்று கவனிப்பேன் என ராமதாஸ் உறுதியாக கூறியிருப்பதால், கட்சியின் எதிர்கால நலன்கருதி அன்புமணி பக்கம் சாய்ந்திருந்த நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் அடுத்தகட்ட தங்களது நிலை குறித்த கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பாமக பொதுச்செயலாளரை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தந்தால் ரூ.100 பரிசு தருவதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில் நேற்று அன்புமணியை அவர் சந்தித்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் அவர் மீதான நடவடிக்கைக்கு நிறுவனர் ராமதாஸ் தயாராகி விட்டதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்புமணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததோடு, அவரிடம் இருந்து காரை பரிசாக வடிவேல் ராவணன் பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் படத்துடன் செய்தி பரவியது. அத்தோடு தைலாபுரத்தை கைவிட்டு பனையூரில் வடிவேல் ராவணன் தஞ்சமடைந்து விட்டதாகவும் வெளியான தகவலால் அவரை உடனடியாக பாமகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொருவரை புதிதாக அப்பதவிக்கு நியமிக்க ராமதாஸ் முடிவெடுத்து விட்டதாகவும், விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகின்றன. இதனால் பாமகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post பனையூரில் தஞ்சமடைந்த வடிவேல் ராவணன் பாமக பொதுச்செயலரை நீக்க ராமதாஸ் அதிரடி முடிவு: கலக்கத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் appeared first on Dinakaran.