சென்னை: பள்ளிகளில் செய்முறை தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
இந்நிலையில் பள்ளிகளில் செய்முறை தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையின்றி மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
ஒவ்வொரு 5 மையத்துக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது . மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
The post பள்ளிகளில் செய்முறை தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.