புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில், பயங்கரவாத கட்டமைப்புகள் பலத்த இழப்பைச் சந்தித்தன.