நகர்ப்புற வரலாற்றைப்போல கிராமப்புறங்களின் சமூக வாழ்க்கை, மக்களின் வாழ்வியல் முறைகள் வரலாற்றில் அவ்வளவாகப் பதிவு செய்யப்படவில்லையே என்ற மனக்குறை எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை ஓரளவு போக்கும் வகையில், இந்தத் தொடரில் என்னால் இயன்ற அளவு தகவல்களைப் பதிவு செய்து வருகிறேன். அந்த வகையில் இன்னும் ஒருசில தகவல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்…
அன்றைக்கெல்லாம் ஒவ்வொரு கிராமத்துக்கும் காவல்காரர்கள் என்று சிலர் இருப்பார்கள். போலீஸார் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில் ஊர்க்காவல் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். நல்ல திடகாத்திரம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் தெரிந்த நபர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இரவில் 2 – 3 முறை கிராமத்தைச் சுற்றி வருவார்கள். திருடர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதைக் கண்காணித்தல், ஆடு, கோழி திருட்டுகள், வைக்கோல் படப்புகள் தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதில் இவர்களின் பங்கு முக்கியமானதாகும். (அப்பொழுதெல்லாம் இருதரப்புக்கு இடையே பகை ஏற்பட்டால் இரவு நேரத்தில் வைக்கோல் படப்புகளுக்கு தீவைத்து பழிவாங்குவது வழக்கமாக இருந்தது).