
வேலூர்: கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,200 கன அடிக்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கடந்து வந்து கொண்டிருப்பதால் பாலாற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழக – ஆந்திர எல்லையில் புல்லூரில் ஆந்திர மாநில அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பகுதியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கடந்து வருகிறது. தடுப்பணையை கடந்த ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தால் பாலாற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பேத்தமங்கலா, ராமசாகர் அணைகள் நிரம்பியுள்ளதால் இனி வரும் நாட்களில் பாலாற்று வெள்ளத்தின் அளவு தற்போதைய நிலையை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

