பாட்னா: பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படும் நிலையில், பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும், பாஜகவின் மாநிலத் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால், கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை மேற்கோள் காட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நிதிஷ் குமார் அமைச்சரவை இன்று அல்லது நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும், மாநிலத் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் வருவாய் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை அடைப்படையாக கொண்டு பாஜக இயங்கி வருகிறது. மாநில தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய மத்தியத் தலைமைக்கு நான் நன்றி கூறிகொள்ள விரும்புகிறேன்” என்றார்.