தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் புதைந்துள்ளன.
“புரன் குமாருக்கு நேர்ந்தது ஒரு குடும்பத்தின் விஷயம் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன. நீங்கள் எவ்வளவுதான் வெற்றி பெற்றவராக அல்லது திறமையானவராக இருந்தாலும், நீங்கள் தலித்தாக இருந்தால், உங்களை அடக்கலாம், நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்பதே அந்த செய்தி” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்தில் தொடங்கி இந்தச் சம்பவத்தை அலச ஆரம்பிக்கலாம்.