மும்பை: புரோ கபடி லீக் 12-வது சீசன் வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் லீக் வடிவத்தில், வடிவத்தில், போட்டி அமைப்பாளர்கள் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதன்படி லீக் சுற்று 108 ஆட்டங்களை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்களில் விளையாடும். டை-பிரேக்கர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களுக்கும் கோல்டன் ரெய்டும் கொண்டுவரப்படுகிறது. இதற்கு முன்னர் கோல்டன் ரெய்டு, பிளே ஆஃப் சுற்றுகளில் மட்டுமே இருந்தது. இனிமேல் ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க 5 ரெய்டுகள் கொண்ட ஷுட் அவுட் நடத்தப்படும். 5 ரெய்டுகளுக்குப் பிறகும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், கோல்டன் ரெய்டு விதி அமல்படுத்தப்படும்.