பூமிதான வாரியக் கூட்டம் 10.06.2025 அன்று சென்னை சேப்பாக்கம் ஐந்தாம் தளத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. பூமிதான வாரியத் தலைவர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாரியக் கூட்டத்தில் மொத்தம் 58 கூட்டப் பொருள்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்படி திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 1755 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பயன்பாட்டிற்காக 35.01 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலங்களில் வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பயனாளிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக 3.00 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலங்களில் மறுவிநியோகப் பத்திரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமிதான சட்டப்பிரிவு 19(1) -இன்படி 141 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்காக 6.36 ஏக்கர் பூமிதான நிலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 இனங்களுக்கு அரசு பொது நோக்கத்திற்காக 4.71 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் வாரிய அலுவல் சார்ந்த உறுப்பினர்களான அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கூடுதல் செயலாளர் திருமதி. வெ.பத்மா, நிலச்சீர்திருத்த ஆணையர் த.ந.ஹரிஹரன், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் மற்றும் நிலச்சீர்திருத்த இயக்குநர் / உறுப்பினர் செயலர்/ தமிழ்நாடு பூமிதான வாரியம் (மு.கூ.பொ) ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. மற்றும் இதர அலுவல் சார்ந்த உறுப்பினர்களான இயக்குநர் வேளாண்மைத்துறை சார்பாக திருமதி. K.சோபியா சத்தியவதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும், இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான திருவாளர்கள் கே.ஆர்.கண்ணன் மற்றும் அ.உறுமத்தான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
The post பூமிதான வாரியத் தலைவர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெற்றது appeared first on Dinakaran.