சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, கோடை வெயில் தாக்கத்தை சமாளிப்பதற்காக மோர் மற்றும் காகித கூழ் தொப்பிகள் (Pith Hat) வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இன்று (14.03.2025) காலை, போர் நினைவுச்சின்னம் அருகில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு ஆவின் மோர் பாக்கெட்டுகள் வழங்கி 2025ம் ஆண்டிற்கான மோர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு பித் ஹேட் (Pith Hat) காகித கூழ் தொப்பிகளை வழங்கினார்கள்.
ஆவின் மோர் வழங்கும் திட்டத்திற்காக, ஒரு மோர் பாக்கெட் ரூ.6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோர் பாக்கெட்டுக்கு ரூ.30,789/- என 120 நாட்களுக்கு ரூ.37,56,273/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கு காலை மாலை என இருவேளையும் மோர் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து காவல் மாவட்டங்களிலும் போக்குவரத்து காவல் அதிகாரிகள். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மோர் மற்றும் பித் ஹேட் (Pith Hat) காகித கூழ் தொப்பிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் R.சுதாகர், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) பண்டி கங்காதர், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
The post போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு காகித கூழ் தொப்பிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.