சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.