இம்பால்: மணிப்பூரில் போராட்டக்காரர்கள் நடத்திய முழுஅடைப்புப் போராட்டத்தால் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையை எதிர்த்து குகி இனக்குழுக்கள் அழைப்பு விடுத்திருந்த காலவரையற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் பகுதியாக இந்தப் போராட்டம் நடந்தது.
குகி இனமக்கள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மற்றும் தெங்கவுன்பால் மாவட்டங்களில் போராட்டக்கார்கள் சாலைகளில் டயர்களை எரித்தும் கற்களைப் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அவை பாதுகாப்பு படையினரால் அப்புறப்படுத்தப்பட்டன. என்றாலும் இரு தரப்புக்கும் இடையில் புதிய மோதல் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. குகி இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் சில வாகனங்கள் இயங்கின என்றாலும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர். சனிக்கிழமை வன்முறை வெடித்த காங்போக்பி மாவட்டத்தில் அமைதி நிலவினாலும் பதற்றம் நிலவியது.