புதுடெல்லி: மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மார்ச் 8-ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கடந்த 2023 மே மாதம் முதல் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (மார்ச் 1) நடந்தது. டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில் மாநிலத்தில் கலவரத்துக்கு முந்தைய நிலைமையை மீட்டெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்பு, இதுபோன்ற உயர் மட்ட அளவிலான கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.