குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் 'மரகதமலை' என்ற படம் உருவாகியுள்ளது. ஃபேன்டஸி டிராமா கதையை கொண்ட இந்தப் படத்தை எல்.ஜி.மூவிஸ் சார்பில் எஸ்.லதா தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப், நாயகியாக தீப்ஷிஹா நடிக்கின்றனர். மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, தம்பி ராமையா, சம்பத் ராம் என பலர் நடித்துள்ளனர். எல்.வி. முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"இதன் கதையை 18-ம் நூற்றாண்டில் நடந்ததை போல உருவாக்கி இருக்கிறோம். புலி, யானை, டிராகன், கொரில்லா,பாம்பு, குதிரை ஆகியவற்றைக் கொண்ட ஃபேன்டஸி டிராமாவாக படம் இருக்கும். இப்போது விஎப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த மாதம் வெளிவர இருக்கிறது. இதன் படப்பிடிப்பை, தடா காட்டுப்பகுதியில் பிரம்மாண்டமாக செட் அமைத்து நடத்தினோம்" என்றார் இயக்குநர் எஸ்.லதா. இதன் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.