டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கடந்த 2020 பிப்ரவரி 7-ம் தேதி மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் உயிரிழந்தார். சேலம் மேட்டூரைச் சேர்ந்த அரசு மருத்துவரான லட்சுமி நரசிம்மன் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க உதவினார். சக மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உயிர்க் காக்கும் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக மக்கள் சேவை செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்பினார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர். அன்றைய அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்தனர்.
மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்தால் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள் பழி வாங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பது மருத்துவர்கள் மட்டுமன்றி மக்களுக்கும் நன்றாகவே தெரிந்தது. லட்சுமி நரசிம்மன் 1986-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே மருத்துவ மாணவர் சங்க செயலாளராக போராட்டத்தை முன்னெடுத்தவர். அன்று முதல் இன்று வரை பல போராட்டங்களை மருத்துவ சமுதாயத்துக்காக முன்னின்று நடத்தி வெற்றி பெற்றவர். குறிப்பாக பயிற்சி மருத்துவர் உதவித்தொகை உயர்வு, மாணவர் கல்விக் கட்டணக் குறைப்பு, மருத்துவக் கல்வியில் தனியார் மயம் எதிர்ப்பு, அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை 4-க்கான போராட்டம் என பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி சென்றவர்தான் லட்சுமி நரசிம்மன்.