தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும்வரை, தமிழகத்துக்கு ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது’ என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. இது தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.