அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தப் பகைவனும் இல்லை என்று சொல்வதுண்டு. 30 ஆண்டுகளைக் கடந்து ஓர் அரசியல் பத்திரிகையாளனாக அனைத்து முகாம்களிலும் தாமரை இலைத் தண்ணீராகப் பழகி வருபவன் நான். சமூக வலைதள உலகம் பிறப்பதற்கு முன்புவரை, கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போர், தத்துவ யுத்தம் என்று வரும்போது மேடைகளில் ஆரோக்கியமான விவாதம் அனல் பறந்து பார்த்திருக்கிறேன். அது நாகரீகமாகவும் இருக்கும்.
ஆனால், இன்றைக்கு அரசியல் என்பதே வேறியேற்றப்பட்டத் தொண்டர்கள், லாபியிஸ்டுகள், ஸ்ரேட்டஜிஸ்டுகள், ஐடி விங்குகளில் இயங்குபவர்கள் என இடைத்தரகர்களால் மாசு மயமாகிவிட்டது. குறிப்பாக, ‘நீ பெரியவனா? நான் பெரியவனா?’ என்கிற தனிமனித வெறுப்பாகவும் வன்மமாகவும் வரம்பு மீறிய வாய்ச்சண்டையாகவும் மாறிப் போய்விட்டது.