சென்னை: மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், காவல்துறை கண்காணிப்பாளர் ஆக இருந்தாலும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்த அதிகாரி இருக்க மாட்டான் என்று தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியதாக ஓர் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கவை.