சென்னை: மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய மாணவர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே. நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதுடன், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பில், “மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாத,” என்று வாதிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதி வழங்கிய உத்தரவில், ” 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும். ஆகவே மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய மாணவர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறோம், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி : தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை எனவும் உத்தரவு!! appeared first on Dinakaran.