* 3 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களுடன் சந்திப்பு, நாளை 1.50 லட்சம் பேருக்கு அரசு நல திட்ட உதவி
தஞ்சை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறார். தொடர்ந்து 3 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களுடன் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், இன்று (15ம் தேதி) மற்றும் நாளை (16ம் தேதி) ஆகிய 2 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் காரில் கல்லணைக்கு செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விடுகிறார்.
அதனை தொடர்ந்து மாலை தஞ்சை வரும் முதல்வர், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை அவர் திறந்து வைக்கிறார். அன்றிரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் முதல்வர் தங்குகிறார். நாளை (16ம் தேதி) காலை எம்எல்ஏ துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பின்னர் தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மாலையில் திருச்சி வந்து, விமானம் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி திருச்சி, தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் பாசனத்துக்காக கல்லணையை இன்று திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.