முதல்வர் வேட்பாளர் போட்டியில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த சி.சுப்பிரமணியம் இதுகுறித்து கூறும்போது, “முதல்வர் வேட்பாளர் தேர்வில் காமராஜர் போட்டியிடுவார் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அவர் போட்டியிட்டவுடன், ராஜாஜியின் ஆலோசனையின் பேரில்தான் காமராஜருக்கு எதிராகப் போட்டியிட்டேன். பக்தவத்சலமும் என்னை முன்மொழிந்தார்.
முதல்வர் பதவியில் இருந்து ராஜாஜி விலகியதும், நானும் கோவைக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மீண்டும் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். அதேநேரம், காமராஜர் அமைச்சரவையில் என்னைச் சேரும்படி ராஜாஜி உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை. அதேபோல், என்னையும், பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் சேர்க்கும்படி காமராஜரிடம், பிரதமர் நேரு கூறியதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. இருப்பினும் முறையான அழைப்பு வரவில்லை. நானாக வலிய போய் செல்லவும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை” என்றார்.