புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது மிகவும் எளிதல்ல என பெங்களூருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்கிற தொழிலதிபர் தெரிவித்துள்ளார். இவர்தான் மெகுல் சோக்ஸியின் ஊழல்கள் குறித்து முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது மிகவும் எளிதல்ல. மேலும் விஜய் மல்லையா செய்து வருவதைப் போல இவரும் செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் மெகுல் சோக்ஸி பணபலம் மிக்கவர். அவர் ஐரோப்பாவில் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி இக்குற்றத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு அவரை நாடு கடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சோக்ஸி இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து, உலகம் எங்கும் பதுக்கி வைத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை திரும்பப் பெறுவதே மிக முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை இந்திய அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.