மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உணவுக்காக குடியிருப்பு பகுதியில் உள்ள மாமரத்தை பாகுபலி யானை உலுக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனத்திலிருந்து வெளியேறி சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடி வரும் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்த யானை இரவில் வனப்பகுதியை ஒட்டிய ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து பயிர்கள் சேதம் செய்யப்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் அடுத்துள்ள வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்து வருகின்றன.
இந்த நிலையில் உணவுக்காக மாமரத்தை உலுக்கிய பாகுபலி யானையின் வீடியோவை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
The post மேட்டுப்பாளையம் அருகே உணவுக்காக மாமரத்தை உலுக்கிய பாகுபலி யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.