புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2024-ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகளை இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ளது. இதில் தேசிய அளவில் ஷக்தி துபே முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹரிஷிதா கோயல் மற்றும் டோங்ரே அர்சித் பராக் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கடந்த 2024, ஜுன் மாதம் 16ம் தேதி நடந்த தேர்வினை 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் எழுதினர். அவர்களில் மொத்தம் 1009 பேர் குடிமை பணிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். 2024, செப்டம்பரில் நடந்த எழுத்துத் தேர்வில் (முதன்மை) மொத்தம் 14,627 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில், 2,845 பேர் ஆளுமைத் தேர்வுக்குத் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே மொத்தம் 1009 பேர் (725 ஆண்கள், 284 பெண்கள்) தேர்வு ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.