புதுடெல்லி: பாஸ்டேக்கில் புதிதாக ஆண்டு கட்டண முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம், தனியார் வாகனங்கள் ரூ.3,000 செலுத்தி ஆண்டுக்கு 200 முறை சுங்கச் சாவடிகளை கடந்து செல்லலாம். வரும் ஆகஸ்ட் 15 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று தனியார் வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தார். ரூ.3,000-க்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர பாஸ், கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக சாராத வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பாஸ் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு, எது முன்னதாக வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.