ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 205 ரன்களை குவித்த போதிலும் பலவீனமான பந்துவீச்சால் லக்னோ அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.
இந்த சீசனுக்காக ரிஷப் பந்த்தை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதேவேளையில் நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இவர்கள் இருவருக்கு மட்டுமே ரூ.48 கோடியை செலவழித்தது லக்னோ அணி நிர்வாகம். இதன் காரணமாகவே வலுவான பந்துவீச்சு துறையை லக்னோ அணியால் கட்டமைக்க முடியாமல் போனதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி தெரிவித்துள்ளார்.