சென்னை: தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம் என்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சி.விஜயபாஸ்கர் (அதிமுக): ‘சிறப்பான நிதி மேலாண்மை செய்து வருவாய் பற்றாக்குறையை குறைப்போம், கடனை குறைப்போம்’ என்று சொன்னீர்கள். ஆனால், இந்த ஆண்டு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் கடன் வாங்கலாம் என்பதற்காக மூச்சு முட்டும் அளவுக்கு கடன் வாங்க வேண்டுமா. ஒவ்வொரு தனிநபர் தலையிலும் ரூ.1.32 லட்சம், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4.13 லட்சம் கடன் சுமையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.