ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையால், வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இச்சாகுபடிக்கு தேவையான உரியத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நல்ல மண் வளம் மற்றும் ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் மற்றும் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையை அடிப்படையாக கொண்டு, பன்னீர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய 4 வண்ணங்களில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.