சென்னை : டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வீட்டில் அமலாக்கத்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது. இதன்பின் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தரப்பில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் வைத்த சீலினை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “எதன் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்கள் எதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது? அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம், ஆவணங்களை கைப்பற்றலாம். சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்தனர். மேலும் வீடு பூட்டியிருந்தால் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பியதோடு, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 17ம் தேதி ஒத்திவைத்தனர்.
The post விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.