புதுடெல்லி: குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கவுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.