வாஷிங்டன்: உலக நாடுகள் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அதிபர் டிரம்ப் விதித்த கெடு கடந்த 9ம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், பரஸ்பர வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இதன் மூலம் இந்தோனேசிய சந்தையில் முழு அணுகல் எங்களுக்கு கிடைத்ததுள்ளது. இதற்கு முன் நாங்கள் இந்தோனேசிய சந்தையில் எங்களால் நுழைய முடியாத அளவுக்கு வரி இருந்தது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய விஷயம். இதே வழியில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தியா உடனான பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் நாங்கள் நுழைவோம்’’ என்றார். இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் 20 சதவீத வரிக்கு குறைவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
* இந்தியாவுக்கு நேட்டோவும் எச்சரிக்கை
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, அமெரிக்க செனட்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘நீங்கள் (இந்தியா, சீனா, பிரேசில்) ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகின்றீர்கள்; அவர்களிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்கினால், அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால் உங்கள் மீது 100% இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் ’ என்று அவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
The post விரைவில் வர்த்தக ஒப்பந்தத்துடன்இந்திய சந்தையில் அமெரிக்கா நுழையும்: அதிபர் டிரம்ப் அதிரடி appeared first on Dinakaran.