சென்னை: தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகபுரத்தை சேர்ந்தவர் யோகேஷ்பாபு. இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது பகுதியில் கழிவு நீர் இணைப்பு இல்லை. பலமுறை சென்னை மாநகராட்சிக்கு மனுக்கள் அனுப்பியும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதையடுத்து, எனது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டினேன். இந்த செப்டிக் டேங்க் நிறைந்துவிட்டால் கழிவுகளை அகற்றுவதற்காக மாநகராட்சியிடம் கோரிக்கை வைப்போம். மாநகராட்சி ஊழியர்களும் கழிவு நீரை அகற்றுவார்கள். அந்த வகையில் கடந்த 2013 செம்டம்பர் 30ம் தேதி எனது வீட்டின் செப்டிக் டேங்க் நிறைந்ததால் மாநகராட்சியை தொடர்பு கொண்டேன். இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 3வது மண்டல ஊழியர்கள் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, முனுசாமி என்ற ஊழியர் செப்டிக் டேங்கில் இறங்கியுள்ளார். மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முனுசாமியை காப்பாற்ற முடியவில்லை. முனுசாமி டேங்கில் இருந்த வாயு தாக்கி இறந்துள்ளார். இதையடுத்து, பணியில் இருந்து எனக்கு தகவல் வந்தது. உடனடியாக நான் வீட்டுக்கு சென்று உடனடியாக 3வது மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தேன். மேலும், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடாக கொடுத்தேன்.
இந்த நிலையில், முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்குமாறு சென்னை மாநகராட்சி 3வது மண்டல அதிகாரி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்கள் பகுதி முழுவதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால்தான் செப்டிக் டேங்க் கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிஷ்டவசமானது. அதனால்தான் எனது சொந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்தேன். இந்த நிலையில் முழு இழப்பீடையும் தருமாறு மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி ஆஜராகி, தனியார் செப்டிக் டேங்கில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர்தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும். மாநகராட்சி அந்த தொகையை தந்துவிட்டால் வீட்டு உரிமையாளர் அந்த தொகையை மாநகராட்சியிடம் தர வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய விதிகளின் அடிப்படையில்தான் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகியுள்ளார். உரிய விதிகளின் அடிப்படையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. எனவே, அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
The post வீட்டு செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு நேர்ந்தால், வீட்டின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.