கரிசல் பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக் குரல் எழுப்பியவர் பூலித்தேவன், அதேபோல், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் மற்றும் பூலித்தேவன் படையில் தளபதிகளாக இருந்த ஒண்டிவீரன், பொட்டி பகடை, கருப்பன் பகடை உள்ளிட்டோரும் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். சிவகிரி, சேத்தூர் பாளையக்காரர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு போராட விரும்பினார் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி அக்னி களமாகத் திகழ்ந்த கரிசல் பூமி மேற்கு தொடர்ச்சிமலை வரை விரிந்திருந்தது.
நண்பர் எஸ்.இலட்சுமணப் பெருமாள் எழுதிய ‘நிட்சாப நதித்துறை’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ஒரு காலத்தில் கேந்திர நகரமாக விளங்கிய சாத்தூர், வைப்பாறு மற்றும் கரிசல் மண், மக்களின் வாழ்வியல் குறித்து அந்த வரலாற்றுப் புதினத்தில் சுவைபட விவரித்துள்ளார்.