புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மெகுல் சோக்ஸி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்றார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பினார். இது தொடர்பாக அமலாக்கத் துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 65 வயதாகும் மெகுல் சோக்ஸி, வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடியின் உறவினர் ஆவார்.