
தேர்தல் பணிகளில் எந்தவித சுணக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு குழுக்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது திமுக தலைமை. இந்த நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன. இதில், ஆளும்கட்சியான திமுக கடந்தாண்டே தேர்தலுக்காக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்தக் குழுவானது மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகள் நியமனம், மாவட்டங்கள் பிரிப்பு உட்பட பல்வேறு பரிந்துரைகளை தலைமைக்கு அக்குழு அளித்தது.

