வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்று கனவு கொண்ட மாணவர்களின் முதல் இலக்கு பெரும்பாலும் லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அமெரிக்காவின் ஹாவர்டு என்று தான் வரிசைப்படும். ஆனால், வெளிநாட்டு மாணவர்களின் ஹாவர்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தடை என்ற ஓர் அதிரடி, ‘அடாவடி’ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மாணவர்கள், பார்வையாளர்கள் பரிமாற்ற திட்டத்தின் (Student and Exchange Visitor Program – SEVP) மூலம் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் ஆண்டுதோறும் சேருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 உலக நாடுகளை சேர்ந்த 6,800 மாணவர்கள் சேர்கின்றனர், அதில் சராசரியாக 500 முதல் 800 பேர் வரை இந்திய மாணவர்களும் உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். நடப்பு கல்வி ஆண்டில் 788 இந்திய மாணவர்கள் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளனர்.