துபாய்: பெண்கள் ஹிஜாப் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டும் என்று பாடல் பாடிய ஈரான் பாடகருக்கு 74 கசையடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் பெண் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். சில நாட்களில் அவர் மரணமடைந்தார். இதை கண்டித்து நாடுமுழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
இந்த போராட்டங்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கினர். இதையொட்டி நடந்த மோதல்களில் 500 பேர் பலியானார்கள். பாடகரும் இசை கலைஞருமான மெஹ்தி யராஹி ஈரானிய நகரங்களில் பெண்கள் ஹிஜாப் இல்லாமல் வெளியில்செல்ல வேண்டும் என்று பாடல் பாடினார். இந்த வீடியோ பாடல் வைரலாக பரவியதை அடுத்து 2023ம் ஆண்டு யராஹி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,யராஹிக்கு நேற்று முன்தினம் 74 கசையடி தண்டனை வழங்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர் ஹஹ்ரா மினுயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,மது குடித்ததற்காக யராஹிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாடல் தொடர்பான குற்றத்துக்காக அல்ல என்று கூறினார்.
The post ஹிஜாப்புக்கு எதிராக பாடல் ஈரான் பாடகருக்கு கசையடி appeared first on Dinakaran.