இந்திய முப்படைகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய இடங்களிலிருந்து வரும் தீவிரவாத செயல்களுக்கு எதிராக இந்தியா ஒரு உறுதியான தேசிய கொள்கையை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள், ராணுவ நிலைகளை தாக்காமல் தீவிரவாத முகாம்களை மட்டுமே துல்லியமாக தாக்கிய இந்திய ராணுவத்தின் உறுதி, துணிச்சலை காங்கிரஸ் பாராட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பதிவில், இந்திய ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, “நமது ராணுவ வீரர்கள் பொறுமையாகவும், தைரியமாகவும் இந்தியாவின் சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொள்ள கடவுள் அவர்களுக்கு பாதுகாப்பை தருவார்” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய வௌியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா பூஜ்ய சகிப்புத்தன்மையை கொண்டுள்ளதை ஆபரேஷன் சிந்தூர் வௌிப்படுத்தி உள்ளது” என கூறியுள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தகுந்த பதிலடி, தீவிரவாதத்தை இந்தியா பொறுத்து கொள்ளாது என்பதை உறுதியுடன் வௌிப்படுத்தி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “பஹல்காம் தாக்குதலுக்கு விரைவாக பழி வாங்கிய இந்திய ஆயுத படைகளின் துணிச்சலான வீரர்களை நான் வணங்குகிறேன். அவர்களின் ஈடு, இணையற்ற துணிச்சல் மிக்க துல்லிய தாக்குதலால் இந்தியா இரும்பு மன உறுதியுடன் தன்னை தற்காத்து கொள்ளும் என்பதை நிரூபித்துள்ளது” என பாராட்டி உள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, “ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னால் உள்ள நம் ஆயுத படை வீரர்களின் அசாதாரண துணிச்சலுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
அவர்களின் வீரச்செயல் இந்தியா ஒருபோதும் தீவிரவாதத்தை பொறுத்து கொள்ளாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது” என வாழ்த்தி உள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், “தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போரில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது. நம் இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். 140 கோடி இந்திய மக்களும் இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்திய ராணுவம் தாக்கி உள்ளது. இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வெற்றி” என பெருமிதம் தெரிவித்தார். இதேபோல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
The post இந்திய முப்படைகளின் துணிச்சலான நடவடிக்கை: தலைவர்கள் பாராட்டு appeared first on Dinakaran.