புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியின் சவுதி அரேபியா பயணம் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் நிலைத்தன்மையை அதிகரிக்கவும், உலகளாவிய எரிசக்தி சந்தை இயக்கவியலை சமநிலைப்படுத்தவும் சவுதி அரேபியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சந்தைகளில் உள்ள அனைத்து எரிசக்தி ஆதாரங்களும் விநியோக பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை இருநாடுகளும் வலியுறுத்தியது. காலநிலை மாற்றம், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் மூலங்களை விட உமிழ்வுகளில் கவனம் செலுத்தி காலநிலை ஒப்பந்தங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருநாடுகளும் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
பிரதமர் மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சூழலில் தீவிரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிபாடுகளிலும் கண்டிக்கத்தக்கது. இது மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலில் ஒன்றாகும். எந்த ஒரு தீவிரவாத செயலிலும், எந்த காரணத்திற்காகவும் எந்த நியாயமும் இருக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post உலகளாவிய எண்ணெய் சந்தை நிலைத்தன்மை; இந்தியா-சவுதி அரேபியா இணைந்து செயல்படும்: இரு நாடுகளும் கூட்டறிக்கை appeared first on Dinakaran.