சென்னை: ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் போப் பிரான்சிஸ் என அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ். இவர் 2013 மார்ச் 13இல் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்தார். போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர். பிப்ரவரி.14இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் 38 நாட்களுக்கு பின் வீடு திரும்பியிருந்தார். ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்(88) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
போப் பிரான்சிஸ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது, கத்தோலிக்க சமூகத்துக்கு எனது இரங்கல். உலகெங்கிலுமுள்ள மக்களால் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து போப் பிரான்சிஸ் சேவையாற்றினார் என புகழஞ்சலி செலுத்தினார்.
போப் பிரான்சிஸ் மறைவு : வைகோ இரங்கல்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி துக்கத்தை தருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்தார். சாதி மதங்களால் எந்த ரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்று அருள்மொழி வழங்கியவர் போப் ஆண்டவர். அருள்மொழி வழங்கிய போப்பரசர் மறைவு அனைத்து தரப்பினரை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. துயர் நிறைந்த ஆழ்ந்த இரங்கலை மதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
போப் பிரான்சிஸ் மறைவு : தயாநிதி மாறன் இரங்கல்
கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன் என எம்.பி தயாநிதி மாறன் இரங்கல் தெரிவித்தார். அன்னாரை இழந்து வாடும் கத்தோலிக்க கிறிஸ்தவப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.
The post ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்: போப் பிரான்சிஸ் மறைவிற்கு பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.